போட்டி பலமாக உள்ளது. திமுக அமைப்பு ரீதியாக STRONGEST கட்சி- குறைந்த பட்சம் தமிழக அளவில். திமுக கட்டுக்கோப்பான கட்சி என கடந்த காலத்தில் பலமுறை நிருபித்திருக்கிறது. அதன் வாழ்வாதாரமான பலம், இதன் தலைவர் கருணாநிதியும், அவரின் பிராசார யுக்தியும் தான். தூணைத் துரும்பாகவும், பேனை பெருமாளாகவும் காட்ட வல்லவர். ஒரு விசயம் எவ்வித சாயம் பூசப்பட வேண்டும் என்பதிலும், புத்திசாலித்தனமாய் அதை எதிர்ப்பது யாராய் இருந்தாலும் (பத்திரிக்கையாளராயினும்) அவர்களின் குரலை இவர் ஏதோ ஒரு வழியில் SILENT செய்திடுவார். கட்சிக்குள் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால் உடனே சிறை நிரப்பும் போராட்டம், தண்டவாளத்தில் தலை வைக்கிறேன்னு ஆரம்பித்து மக்களை திசை திருப்புவதில் வல்லவர். இப்போதுகூட செயற்குழு, பொதுக்குழுவில் அண்ணன் தம்பி விசயம் பத்திரிக்கையில் பேச ஆரம்பித்த உடன், சமச்சீர் கல்விக்காக மறியல் போர் அறிவித்தார். சும்மா இருக்கும் தொண்டனுக்கு வேலை வேண்டுமல்லவா?
இப்படி சகலதிறமையும் உள்ள தலைவனைக் கொண்ட கட்டுக்கோப்பான கட்சி, கலகலக்க ஆரம்பித்துவிட்டது. அதன் கட்டமைப்பில் விரிசல்கள் விழ ஆரம்பித்து விட்டது. பிரதான எதிரியான அதிமுக இதுவரை திமுகவை அழிக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. ஏனென்றால் திமுக இருக்கும் வரை, அதுவும் நேர் எதிரான அரசியல் நிலைப்பாட்டை எப்போதும் எடுக்கும் திமுக இருப்பது தான் அதிமுகவிற்கு நல்லது. அதிகபட்சம் அதிமுகவின் முயற்சி, திமுகவை பலவீனமான ஒரு கட்சியாக்க முயல்வதாகத்தான் இருக்க முடியும். ஆகவே திமுகவை அழிக்க முயலாது.
விஜயகாந்த், சரசர என்று வளர்ந்து வரும் இவரின் வெளிப்படையான, முக்கியமான எதிரி திமுக தான். திமுகவின் அழிவில் வளரத்தக்க ஒரு கட்சி இவருடையது என்றாலும், திமுக முன் இவரது கட்சி ஒரு பொடிப்பயலைப் போன்றது. கடந்த தேர்தலில் சரியான முடிவெடுத்து, திமுகவின் அதிகபட்ச எதிர்ப்பை சந்தித்தார். தேமுதிகவை பற்றி விமரிசிக்காமல், விஜயகாந்த் பற்றி தரம் தாழ்ந்து விமரிசித்தது திமுகவின் ஊடகங்கள். திமுகவின் மிகப்பெரிய பலமான திரிபுவாத பிரச்சாரத்தை மீறி விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக அமரும் விதமாய் தேமுதிக வென்றதற்கு, திரிபுவாத பிரச்சாரச் சூழ்ச்சியை மக்கள் உணர்ந்ததுதான் காரணம். என்வே திமுகவின் செல்வாக்கை குறைப்பதில் இவர் முதல் படி தாண்டிவிட்டார் என்று சொல்லலாம். தாவிது மற்றும் கோலியாத் கதையை நினைவுபடுத்துகிறார். ஆனால் திமுகவை அழிக்க இவரால் இயலாது.
வைகோ, திமுக அழிந்து அதன் தொண்டர்கள் மதிமுகவில் இணைவார்கள் என்ற கனவு இவருக்கு இருக்கலாம். கருணாநிதியே, தன்னை அழைத்து திமுகவின் தலைவராயிருந்து கட்சியை வழி நடத்துங்கள் என்று சொல்வாரென்ற அளவிற்கோ அல்லது கருணாநிதிக்குப் பின் திமுகவின் 2ம் கட்ட தலைவர்கள் தன்னை அழைத்து தலைமை ஏற்க சொல்வார்கள் என்றோ கூட அவர் கனவு காணலாம். அது அவர் உரிமை ! ஆனால் திமுகவை அழிக்கத் தேவையான சக்தியோ, இன்னபிறவோ இவருக்கு இல்லை.
பகையாளியை உறவாடி கெடு என்று காங்கிரஸ் இப்போது செயல்பட்டு அதில் பாதி வெற்றியையும் பெற்று விட்டது. முகவின் எதிர்காலத்தை (பிள்ளைகளை) முடக்கினால் திமுகவை முடக்கி விடலாமென திட்டமிட்டு செயல்பட்டு கனிமொழியை சிறையில் தள்ளியது. தொடர்ந்து மாறன் சகோதரர்களும் அடுத்த இலக்காகி உள்ளனர். காங்கிரஸ் திமுகவை அழிக்கும் எண்ணத்தோடு செயல்படுவது போல்தான் தெரிகிறது. அதில் அவர்கள் வெற்றி பெற்றாலும் அதன் பயனை இப்போது அவர்களால் அனுபவிக்க முடியாது. அந்த நிலையில் தமிழக காங்கிரஸ் இல்லை. அந்த நிலைக்கு வர ஒரு நூற்றாண்டு தேவைப் படலாம்.
இவையெல்லாவற்றையும் விட ஒரு பெரிய எதிரி திமுகவை அழிக்க கண்மூடித்தனமாய் வெலை செய்கிறது.... அது... உட்கட்சிப் பிரச்சனை. தலைமைக்கான போட்டி, அது தொடர்பான உள்ளடி வேலைகள், ஆளும்கட்சியாய் இருந்த காலத்தில் பிரச்சனை/ஊழல் பண்ணாத விசயமே இல்லை எனும் நிலை, அதன் மீதான இந்த ஆட்சியின் சட்டரீதியான நடவடிக்கைகள். இவற்றிலிருந்து திமுக மீளுமா இல்லை மாளுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment