மரண தண்டனையை ஒழிக்க கனிமொழி உள்பட பலர் கடந்த சில காலமாக குரல் கொடுத்து வந்தாலும், பல நாடுகளில் அது ஒழிக்கப்பட்டு விட்டது என்றாலும், இந்தியாவில் அது இப்போது விவாதப் பொருளாயிருக்கிறது. காரணம், முன்பு அப்சல் குரு, கசாப், இப்போது பேரறிவாளன் உள்ளிட்ட ராஜிவ் கொலை குற்றவாளிகள்.
{ஒரு சமூகத்தை எப்படி கட்டுகோப்பாய் கொண்டுசெல்வது என்பதை இஸ்லாமும், இஸ்லாமிய நாடுகளும் வழிகாட்டுகின்றன. சவுதி அரேபியா போன்ற நாடுகளில் தூக்குத்தண்டனை இன்னும் வழக்கத்தில் உள்ளது. நேரமும் ஆர்வமும் இருந்தால் ...
http://en.wikipedia.org/wiki/Crime_in_Saudi_Arabia
http://www.nationmaster.com/country/sa-saudi-arabia/cri-crime
http://www.nationmaster.com/compare/India/Saudi-Arabia/Crime
}
பொதுமக்களில் உணர்ச்சியோடு எப்போதும் விளையாடும் சிலர், இவர்கள் அனைவரின் தூக்குத் தண்டனையை இன உணர்ச்சியோடு இணைத்து விளையாடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஒரு குற்றவாளி இன்ன ஜாதி, இன்ன மதம், இன்ன இனம் என்று அந்த இனமக்கள் திரண்டு அவர்களுக்கான தண்டனையை மாற்ற முயன்றால், நாட்டில் தினமும் இதுபோல் சில போராட்டங்கள் நடைபெறும். பின்பு அது நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையை குலைக்கும், அதன் தொடர்ச்சி அழிவை நோக்கியதாகவே முடியும்.
நம் நாட்டில் கசாப் பிடிபட்ட உடன் அவனை தூக்கிலிடவேண்டும் என்ற குரல் உயர் உணர்ச்சி வேகத்தில் ஒலித்தது. ஆனாலும் அவருக்கு ஒரு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டு அவர் தரப்பு என்னவென்று கேட்டுதான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒரு கொடும்செயல் நிகழ்ந்த இடத்தில், அக்கொடும்செயலை நிறைவேற்றிய ஒருவன், அவ்விடத்திலேயே வைத்து பிடிக்கப்பட்டபோதும் அவனுக்கு இத்தனை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
நீதி பெறுவதற்கான வழிமுறைகள் நமது நாட்டில் சிறப்பாக இருக்கையில், ஒருவர் நீதிமன்றத் தீர்ப்பின் பிறகு இனவெழுச்சியை தூண்டி விடுதலை பெறுவது முறையாகாது. அதற்கு துணை போவது தவறு.
அரசியல்வாதிகள் தங்கள் கைது முதல் ஒவ்வொரு பிரச்சனைக்கும் யாரோ சில அப்பாவிகள் தற்கொலையை பயன்படுத்துகிறார்கள். ஒருவர் தண்டனையை மாற்ற வேறு ஒருவர் தற்கொலை செய்வது விந்தையானது. இவர்கள் ஒரு உயிரின் மதிப்பை அறியவில்லை என்று தான் தோன்றுகிறது. எந்த அரசியல்வாதியும், தனக்கு (அரசியல் அல்லது பண) லாபமில்லாத ஒரு போராட்டத்தில் ஈடுபடுவதில்லை. போராட்டத்தின் அளவு அந்த லாபத்தை பொருத்தது என்பது அனைவரும் அறிந்தது.
கனிமொழி சிறைக்கு சென்றால்தான் சிறையில் பெண்கள் படக்கூடிய அவஸ்தை பற்றி ஊடகங்கள் பேசுகின்றன. சிறைக்குள் ஏற்கனவே இருக்கும் பெண் கைதிகள், அவர்கள் விசாரணைக் கைதியோ, தண்டனைக் கைதியோ, அவர்களின் பிரச்சனை பற்றி அத்தனை காலமும் எந்த ஊடகமும் பேசாதது ஏன்?
இன்று எத்தனையோ தூக்குத்தண்டனை கைதிகள் தூக்குக்காக காத்திருக்கிறார்கள். அவர்களின் குடும்பம், பிள்ளைகள் நடுத்தெருவில் நிற்கின்றனர். இவர்களில் பலர் கொலைத்திட்டமில்லாது, அந்தநேர கோபத்தில் செயல்பட்டு கொலைக் குற்றாவாளியாயிருக்கலாம். அவர்கள் தண்டனை குறைப்பால் எந்த அரசியல்வாதிக்கும் லாபமில்லை எனவே இவர்கள் தூக்கிலேறவேண்டியது தான்.
இலங்கை கடற்படையால் தினமும் அவதிபடும் மீனவர்களுக்காக அடையாள போராட்டங்கள்தான் செய்வார்கள். பிரச்சனை தீரும் வரை ஏன் போராடுவதில்லை? தமிழ் நாட்டுத் தமிழனிடம் (மீனவர்) தலைக்கு ஒரு ஓட்டு மட்டும் தான் இருக்கிறது, எனவே இலங்கை கடற்ப்படையால் சாகடிக்கப்பட்டவர்கள் போக மீதி இருப்பவர்கள் ஓட்டு போட்டால் போதும் போலும். இவர்களுக்கு, அகதிகளுக்கு கிடைக்கும் உயிர்பாதுகாப்பு கூட கிடைப்பதில்லை.
ஆக இவர்களுக்கு, தமிழர் உயிர் பற்றிய அக்கறையும் இல்லை, தூக்குதண்டனை கைதிகள் மீதும் அக்கறையில்லை. அக்கறை "அக்கரை தரும் சர்க்கரை(பணம்?)" மீது தானோ என்று சந்தேகிக்கத்தோன்றுகிறது.