Pages

Monday, November 7, 2011

கூடன்குளம் அணு உலை ஏன் வேண்டாம்?

எல்லா பிரச்சனைகளையும் போல இதற்கும் நாம், உண்மை என்ன என்பதை அறிந்துகொள்ளாமல் இரு தரப்பாக பிரிந்து கிடக்கிறோம்.  டீ கடைமுதல் முகநூல்(facebook) வரை இது நடைபெறுகிறது.  Media வில் உலவ விடப்படும் செய்திகளில், நம் காதில் விழும் செய்தியை
அடிப்படையாய் கொண்டு, நாம் ஒரு நிலையை எடுத்துக்கொள்கிறோம்;
பின் எதிர் நிலை எடுத்தவர் தவறு என்று வாதம் செய்கிறோம். நாமும் சரி அவரும் சரி எதிர் கருத்து என்ன, அதில் உண்மை எவ்வளவு நம் கருத்து எவ்வளவு சரி என்று நாம் ஆராய்ச்சி செய்வதில்லை, அதற்கான நேரமும் இல்லை,


ஒரு கருத்தை பல முலாம் பூசி வெளியிடுவதில் நாம் சமர்த்தர்கள். இதிலும், இது போன்ற விஞ்ஞானம் சம்பத்தப்பட்ட விசயங்களை கற்றவர்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள்.

அணு உலை வேண்டும் என்பவர்களின் வாதம் மூன்று முக்கிய புள்ளிகளின் மேல் அமைந்துள்ளது. அது,
1. நிகழ்கால மின்சாரத் தேவைகளுக்கும், பல மடங்கு உயர இருக்கிற எதிர்கால தேவைகளுக்கும் இந்த உலை அவசியம்.
2. இந்த உலையால் மக்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாத விதமாக‌ எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன.
3. இயற்கை பேரிடர்களால் பாதிக்காது
4. பல கோடி ரூபாய் பணம் செலவிடப்பட்டுள்ளது.

உலை வேண்டாம் என்பவர்களின் வாதம் அல்லது பதில் என்ன‌?

1.  மின்சாரம் தாயாரிக்க இதுதான் ஒரே வழியா அல்லது சிறந்த வழியா?
2 & 3 இத்தொழில்நுட்பத்தில் இந்தியாவை விட அதிக அனுபவம் பெற்ற நாடுகள் கூட தோல்வியை தான் தழுவியுள்ளது.


பலகோடி செலவில் தயாரிக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்படும் செயற்கைகோள்க‌ள் சில தோல்வியடைந்து கடலில் வீழ்ந்தன.  அவைகள் தோல்வியடைந்ததற்கு விஞ்ஞானிகளின் ஏதோ ஒரு தவறு அல்லது கவனகுறைவுதான் காரணமென்பதை அவர்களே
ஒத்துக்கொள்வார்கள்.  அந்த "மனிதத் தவறு" சில நூறு கோடிகளை ரூபாய்களை மட்டும் தான் கடலில் கொட்டுகிறது, இந்த உலை பல‌  நூறு மக்களின் உயிருக்கு உலை வைத்துவிடும்.

கவனக்குறைவாய் ஓட்டி பயணிகளின் உயிர்போக காரணமாய் இருக்கும் ஒட்டுனர்களை சபிக்கிற நாம், அந்த விஞ்ஞானிகளை சபிப்பத்தில்லை ஏனென்றால் முன்னது உயிர் சம்மந்தப்பட்டது, பின்னது வெறும் பணம் சம்மந்தப்பட்டது. 

சரி பாதுகாப்பானது என்றே வைத்துக்கொள்வோம்.

புகைவண்டி, பேருந்து போன்றவற்றில் நீங்கள் எளிதில் தீப்பிடிக்கத்தக்க பொருள்களை (பெட்ரோல், மண்ணெண்ய், பட்டாசு etc) கொண்டு செல்லக்கூடாது. ஏனென்றால் பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கத்தக்கது. அது பயணிகளின் "தலை மேல் தொங்கும் கத்தி"
போன்றது. இந்த விதியை ஒத்ததுதான் கூடன்குளம் மக்கள் கேட்பதும்.  ஒருவேளை அந்த பயணி (எப்போதும் 100% கவனத்தோடு தவறின்றி வேலை பார்க்கும் திறமையுடைய அணு உலை விஞ்ஞானியே ஆனாலும்)  நான் இதை அதிக‌ பட்ச பாதுகாப்போடு தான் கொண்டு வருகிறேன் என்றால் அரசு ஒத்துக்கொள்ளுமா?  அரசின் பதில் பொதுமக்களின் நலனுக்கு ஆபத்து விளைவிக்கதக்க
செயலை செய்யாதீர்கள் என்று தான் சொல்லும். அதுதான் கூடன்குளம் மக்கள் கேட்பதும்.  அப்படிபட்ட பொருளை வேறு ஊருக்கு எடுத்தச் செல்ல வேண்டுமானால் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்காத பாதுகாப்பான வேறு தனியார் வாகனத்தில் எடுத்துசெல்லத்தான்
அரசு அறிவுறுத்தும். அதை போல் அரசும் மின்சாரத்தை வேறு வழியில் தயாரிக்கலாமே.

அரசுகள் திட்டமிட்டு மின்சார தட்டுபாட்டை உருவாக்குகிறார்கள், நிலக்கரி கையிருப்பு இல்லை என்கிறார்கள்.  மற்றப்பகுதியில் வாழ்ந்து கொண்டு மின்சாரத்தேவைக்காக இது செய்துதான் ஆகவேண்டும் என்பவர்கள் தங்கள் பாதுகாப்புக்கு பங்கம் இல்லை என்பதால்தான் சொல்வதாக நினைக்க வேண்டியிருக்கிறது.

கல்பாக்கம் உள்ளிட்ட  பல உலை உள்ள இடங்களில் மக்கள் வாழத்தானே செய்கிறார்களே என்றால் காஷ்மீரில் கூட மக்கள் வாழ்கிறார்கள் நம் சகோதர இந்தியர்கள், தமிழ்நாட்டையும் அதே நிலைக்கு கொண்டு செல்லலாமா? உயிர் வாழ்வ‌தற்கு உத்திரவாதமுள்ள தமிழ்நாட்டை போல ஆக வேண்டும் என்று காஷ்மீர் நினைக்கவேண்டுமே அன்றி,  நாம் காஷ்மீர் போல் ஆக ஆசை படக்கூடாது

இந்த உலை ராஜிவ் கால‌த்தில் போடப்பட்ட ஒப்பந்ததின் அடிப்படையில் தான் எழுந்துள்ளது, அதன் பிறகு, காலம் மாறிவிட்டது, எல்லோருக்கும் அறிவு வளர்ந்திருக்கிறது.  முக்கியமாக கடந்தகாலங்களில், இந்தியாவில் இது போன்ற பிரச்சனை தரதக்க
தொழிற்சாலைகளால் அப்பகுதி மக்கள் பட்ட/ படும் துன்பங்களை அறிந்தபின், கூடன்குளம் மக்கள் ஆதரித்தால் தான் ஆச்சரியப்பட வேண்டும்.  அவர்களும், மணலியிலும், தூத்துக்குடியிலும், இன்னும் பிற இடங்களின் மக்கள் படும் அவஸ்தைகளையும் அறிவார்கள்.
போபால் முதல் ஃபுகுசிமா வரை வரலாறும் அவர்களுக்கும் தெரியும்தானே.

இன்று Mr. கலாம் அறிவித்துள்ள 10 அம்ச திட்டம், மக்களை இலவசம் தந்து ஓட்டு கேட்கும் அரசியல்வியாதிகளின் நீட்சியாகத்தான் கருத வேண்டி இருக்கிறது


You Too Kalaam sir?

Thursday, November 3, 2011

7ம் அறிவு படம் ஒரு பாடம்

பலமுறை பலவாறாக விமரிசிக்கப்பட்ட 7ம் அறிவு பற்றிய என் விமர்சனம் அல்லது கருத்துக்கள்.

எடுத்துக்கொள்ளப்பட்ட விசயம்(போதிதர்மர்) அற்புதமானது. அதை எடுத்த விதம் (making) தான் அனைவரின் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

படம் பார்க்கலாமா? கண்டிப்பாக பார்க்க வேண்டும். (read last paragraph to know why)

த‌ம் முன்னோர்களின் பெருமையை அறிய எந்த சமூகமும் ஆசைப்படும். நாமும் தான். ஆனால் தமிழர் என்றொரு இனமுண்டு அவர்க்கு தனியே ஒரு குணமுண்டு. அது, நான் நினைக்கிறேன் தம்மை தாமே தாழ்த்தி மகிழ்வது, அடுத்த நிலைக்கு செல்ல முயற்சி செய்பவர்களை காலை பிடித்து இழுத்து கீழேதள்ளி "நான் அப்பவே சொன்னேன்" என்று எள்ளி நகையாடுவது. இதைத்தான் பெரும்பாலான விமர்சனங்கள் நிருபிகின்றன.

படத்தில் ஒரு (message) செய்தி சொல்ல வேண்டும் என்று பல இயக்குனர்கள் ஆசைப்படுவர். இது ஒரு வரலாற்று செய்தியை(fact) கற்பனை கலந்து சொல்ல முயன்ற திரைப்படம். இம்முயற்சி வரவேற்கப்பட வேண்டியது. நிகழ்கால கதைகளங்கள், நிகழ்வுகள் மேல் புனையப்பட்ட கதைகள் தமிழ் திரைஉலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால், கடந்தகால அல்லது எதிர்கால நிகழ்வு/களம் பற்றிய திரைப்படங்கள் தமிழ் திரைஉலகில் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று.

இவ்விதமான படங்கள் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டால் இங்கு ரசிக்க ஆள் உண்டு, மொழிமாற்றம் செய்யப்பட்டால் கூட இங்கு எடுபடுவதில்லை.

எம் ஜி அர், Sivaji காலத்திற்கு பின் இவ்விதமான கதைகளை எடுக்க சரியான இயக்குனர்கள் இல்லை, இக்காலத்தில் இது எடுபடாது என்று அனைவரும் நினைப்பது தான் முக்கிய காரணம். எனவேதான் இந்த படமும் நிகழ்கால படமாக எடுக்க தகுந்த கதையாக உருமாற்றியுள்ளனர்.

போதி தர்மர், எப்படி வளர்ந்தார், அவரின் காலத்தில் எப்படி மக்கள் வாழ்ந்தார்கள், அன்று யார் அவருக்கு எதிரி அவரை எப்படி இவர் வென்றார் என்று படமெடுத்தால் இயக்குனருக்கும், கதாநாயக நடிகருக்கும், பேர் கிடைக்கும், விருது கூட கிடைக்கலாம், தயாரிப்பாளருக்கு கோவணம் கூட மிஞ்சாது. எனவே நிகழ்கால கதையாய் எடுத்தது நியாயமானது அல்லது தவறில்லை

போதி தர்மர் தமிழர் என்பது அல்ல படத்தின் முக்கிய புள்ளி, பெரும்பாண்மை தமிழர்கள் அதை அறியவில்லை என்பதே படத்தின் முக்கிய புள்ளி. இந்த புள்ளியை எப்படி தவறாக கையாண்டிருக்கிறார்கள் என்பதை காண்போம்.

ஒரு ஆச்சர்யமான விசயத்தை சொல்லி அதை வைத்து அப்படியே மக்களை மயக்கிவிடுது தப்பில்லை ஆனல் இது ஆச்சர்யமான விசயம் என்பதே போதும் படம் வெற்றி பெற்று விடும் என்று இவர்கள் மயங்கி விட்டார்கள். ஒரு அற்புதமான விசயம் படம் எடுக்க கிடைத்தால் அது வெற்றியை மாபெரும் வெற்றியாக்கும், ஆனால் முதலில் வெற்றி பெற தேவையான விசயங்கள் செய்யாவிட்டால் படுதோல்வியைத்தான் தரும். இந்த தவறைத்தான் இவர்கள் செய்திருக்கிறார்கள். இதுதான் ஒருவரி கதை, சூர்யா கதாநாயகன், இவர் தயாரிப்பாளர் என்று வேறு யாரிடமோ படத்தை ஒப்படைத்து இயக்க சொல்லிவிட்டாரோ முருகதாஸ் என நினைக்கத்தோன்றுகிறது. படம் பலர் இயக்கிய படம்போலுள்ளது. ஒரு தேர்ந்த இயக்குனரின் படம் என நம்ப மனம் வரவில்லை.


இதில் நகைச்சுவை நடிகர் இல்லை ஏனென்றால் இயக்குனர், கதை, திரைக்கதையை விட நகைச்சுவை வேறு தேவை யில்லை என முடிவெடுதிருப்பார் போல.

அந்த நகைச்சுவையை பார்ப்போம். இந்தியா, சீனாவிடம் "நீங்க என்ன சொன்னாலும் செய்ரொம்"ன்னு நிக்கவைக்க, இந்தியாவில் உள்ள ஒரு நாய்க்கு ஒரு ஊசி போடனும், தவிர ஒரு கல்லூரியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவியை கொல்லவேண்டும். (oh my god) ஒரு நாட்டிற்க்கு இது எல்லாம் ஒரு கொசுவை அடிக்கிற அளவு சிறிய வேலை. அதை செய்ய ஏன் ஒரு நோக்கு வர்மம் தெரிந்த நிபுணன் வரார், போன்ற கேள்விகளை 7ம் அறிவிடம் கேட்போம்

நாம்: இருப்பதில் பெரிய வேலை அந்த மருந்தை இந்தியாவிற்குள் கொண்டுவருவது தான். நாயிக்கு ஊசி போடுரது சின்ன வேலை, பெரிய வேலையை செய்ய சாமர்த்தியம் உள்ளவர், நாயிக்கு ஊசி நடுரோட்டுல வச்சிதான் போடனுமா? அதை விசாரிக்கிற போலிஸ் கிட்ட, பொய் சொல்லி, லஞ்சம் கொடுத்து தப்பிக்க முடியதா? ஏன் போலிஸை கொல்றார்?
7th sense: லாஜிக் பார்க்க கூடாது,
நாம்:சரி ஊசியை ஏன் இவனே போடுறான், 300 கோடி வாங்கினவன் செய்யலை?
7th sense: லாஜிக் பார்க்க கூடாது,
நாம்: சரி ஒரு veterinary மருத்துவரை நோக்கு வர்மத்தால் வசப்படுத்தினால் பல நூரு நாயிக்கு போடலாமே
7th sense: லாஜிக் பார்க்க கூடாது,
நாம்:சரி நாய்க்கான ஊசி மருந்தில் இதை கலந்தால் பல ஊர்களில் ஒரே நேரத்தில் நோயை பரப்பலாமே
7th sense: லாஜிக் பார்க்க கூடாது,
நாம்:சரி நாயிக்கு ஊசி போட போலிஸ்காரர் பலரை வில்லன் கொன்றானே அதன் பின் அரசு என்ன‌ செய்கிறது?
7th sense: லாஜிக் பார்க்க கூடாது,

நாம்:........:(

நாம்:அந்த வில்லன் நோக்கு வர்மத்தால் சாலையில் செல்லும் அத்தனை பேரையும் தூண்டி இவர்களை கொல்ல முயர்சிக்கிறான், ஆனால் பின்னர் ஆராய்ச்சிக்குதேவையானதை வெளியிலிருந்து செய்து தரும் மாலதியை பிடித்தபின் அவளை நோக்கு வர்மத்தால் கட்டுப்படுத்தி மற்றவர்களை வெளியே வரவைத்து சுட்டுக்கொல்ல செய்யலாம், அல்லது இம்ரான் என்பவனை பிடித்தபின் அவன் தானே நடந்து சென்று கார்களின் மீது மோதி இறக்கிறான், பதிலாக அவனை வைத்து மற்றவர்களை கொன்றிருக்கலாம். ஏன் செய்யவில்லை?

7th sense: லாஜிக் பார்க்க கூடாது,
நாம்:சரி, வில்லன் பற்றி அறியும்முன்னெ கதாநாயகி, கதாநாயகனை 1 வருடமாய் தேடி வருகிறாள், வில்லன் வந்திருக்காவிட்டால், அந்த ஆராய்சி என்ன ஆகிருக்கும், எதை சாதிப்பதர்கான ஆரய்ச்சி, உதாரணமாக AIDS க்கு மருந்து இப்படி எதாவது ஒன்று இருக்கவேண்டுமல்லவா அது என்ன?
7th sense: லாஜிக் பார்க்க கூடாது,

here, let us stop asking 7th sense


இப்படிபட்ட மோசமான கதை ஒரு மோசமான மசாலா படத்தில் கூட இருக்காது

ஒரு பிரம்மாண்ட படம் எப்படி எடுக்கப்படக்கூடாது என்பதற்கான பாடம் இது

தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாய் செய்தவர்கள் முறையே, தயாரிப்பாளர், கதாநாயகன், இசைஅமைப்பாளர். மற்றவர்கள் தூங்கிவிட்டார்கள், காமிராவும், வசனமும் சில இடங்களில் சொல்லிக்கொள்ளும்படி இருக்கிறது அவ்ளோ தான்

திரைக்கதைப்படி, நாயகிதான் படத்தை தோளில் தூக்கிச்செல்லவேண்டும், எந்த விதத்திலும் பொருந்தாத ஒருவரை நாயகியாக தேர்வு செய்ததின் மர்மம் என்னவோ, பிறப்பால் தமிழர் என்பதை தவிர; அவரின் உச்சரிப்பை அவர் தமிழர் இல்லை என்றால் மன்னித்திருக்கலாம் ( " ...மேல வேல் படக்கூடாது" = வெயில் படக்கூடாது" என்று அறிவீராக).   நடிப்பு?  கிலோ என்ன விலை ரகம்தான். நடிகையை நாயகியாக நிலை நிறுத்தும் வேலையை திரைக்கதை செய்யத்தவறி விட்டது


உண்மையில் படத்தில் நடிகர் சூர்யா தான் படத்தை தோளில் தனி ஒருவராய் சுமந்து செல்கிறார். அவர் ஒரு சில இடங்களில் ஆங்கிலம் படிக்காதவர் போலவும், சில இடங்களில் ஆங்கிலம் அருமையாய் பேசுகிறவராகவும் காட்டுவது மிக அபத்தம்.

இதுபோன்ற விசயங்கள், இது பல சமையற்காரர்களால் கெடுக்கப்பட்ட சாப்பாடு என சந்தேகத்தைக் கிளப்புகிறது, ஒருவர் அருமையாய், "மாதங்களில் அவள் மார்கழி" என்று கொண்டு போகிறார், அடுத்தவர், "சாதங்களில் அவள் தயிர்சாதம்" என சொதப்புகிறார்.

மொத்தத்தில், போதிதர்மர் என 5 STAR HOTEL LABEL ஒட்டப்பட்ட சாப்பாடு பார்சல் உள்ளே, நாளான, கெட்டுப்போன எலுமிச்சை சாதம்.

என்றாலும், அன்னா ஹசாரே, சரியானவரோ, தப்பானவரோ, அவரின் செய்கைகள் ஊழல் எதிர்ப்பு பற்றி அனைவரையும், சிந்திக்க, பேச வைத்தது, அது போல் இப்படமும் தமிழ‌ர்கள் தங்கள் பாரம்பரிய பெருமை பற்றி உணர, சிந்திக்க ஒரு காரணமாய் அமைந்துள்ளதால் இப்படத்தை பாருங்கள்.

Sunday, September 4, 2011

ஒழிக்கப்படவேண்டியது மரண தண்டனையா?

மரண தண்டனையை ஒழிக்க கனிமொழி உள்பட பலர் கடந்த சில காலமாக குரல் கொடுத்து வந்தாலும், பல நாடுகளில் அது ஒழிக்கப்பட்டு விட்டது என்றாலும், இந்தியாவில் அது இப்போது விவாதப் பொருளாயிருக்கிறது. காரணம், முன்பு அப்சல் குரு, கசாப், இப்போது பேரறிவாளன் உள்ளிட்ட ராஜிவ் கொலை குற்றவாளிகள்.

{ஒரு ச‌மூக‌த்தை எப்ப‌டி க‌ட்டுகோப்பாய் கொண்டுசெல்வ‌து என்ப‌தை இஸ்லாமும், இஸ்லாமிய‌ நாடுக‌ளும் வ‌ழிகாட்டுகின்ற‌ன‌. ச‌வுதி அரேபியா போன்ற‌ நாடுக‌ளில் தூக்குத்த‌ண்ட‌னை இன்னும் வ‌ழ‌க்க‌த்தில் உள்ள‌து. நேரமும் ஆர்வமும் இருந்தால் ...
http://en.wikipedia.org/wiki/Crime_in_Saudi_Arabia
http://www.nationmaster.com/country/sa-saudi-arabia/cri-crime
http://www.nationmaster.com/compare/India/Saudi-Arabia/Crime
}

பொதுமக்களில் உணர்ச்சியோடு எப்போதும் விளையாடும் சிலர், இவர்கள் அனைவரின் தூக்குத் தண்டனையை இன உணர்ச்சியோடு இணைத்து விளையாடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஒரு குற்றவாளி இன்ன ஜாதி, இன்ன மதம், இன்ன இனம் என்று அந்த இனமக்கள் திரண்டு அவர்களுக்கான தண்டனையை மாற்ற‌ முயன்றால், நாட்டில் தினமும் இதுபோல் சில போராட்டங்கள் நடைபெறும். பின்பு அது நீதிமன்றத்தின் மீதான‌ நம்பிக்கையை குலைக்கும், அதன் தொடர்ச்சி அழிவை நோக்கியதாகவே முடியும்.

நம் நாட்டில் கசாப் பிடிபட்ட உடன் அவனை தூக்கிலிடவேண்டும் என்ற குரல் உயர் உணர்ச்சி வேகத்தில் ஒலித்தது. ஆனாலும் அவருக்கு ஒரு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டு அவர் தரப்பு என்னவென்று கேட்டுதான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒரு கொடும்செயல் நிகழ்ந்த இடத்தில், அக்கொடும்செயலை நிறைவேற்றிய ஒருவன், அவ்விடத்திலேயே வைத்து பிடிக்கப்பட்டபோதும் அவனுக்கு இத்தனை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

நீதி பெறுவதற்கான வழிமுறைகள் நமது நாட்டில் சிறப்பாக இருக்கையில், ஒருவர் நீதிமன்றத் தீர்ப்பின் பிறகு இனவெழுச்சியை தூண்டி விடுதலை பெறுவது முறையாகாது. அதற்கு துணை போவது தவறு.

அரசியல்வாதிகள் தங்கள் கைது முதல் ஒவ்வொரு பிரச்சனைக்கும் யாரோ சில அப்பாவிகள் தற்கொலையை ப‌ய‌ன்ப‌டுத்துகிறார்க‌ள். ஒருவ‌ர் த‌ண்ட‌னையை மாற்ற‌ வேறு ஒருவ‌ர் த‌ற்கொலை செய்வ‌து விந்தையான‌து. இவ‌ர்க‌ள் ஒரு உயிரின் ம‌திப்பை அறிய‌வில்லை என்று தான் தோன்றுகிற‌து. எந்த‌ அர‌சிய‌ல்வாதியும், த‌னக்கு (அர‌சிய‌ல் அல்ல‌து ப‌ண) லாப‌மில்லா‌த‌ ஒரு போராட்ட‌த்தில் ஈடுப‌டுவ‌தில்லை. போராட்ட‌த்தின் அளவு அந்த‌ லாப‌த்தை பொருத்த‌து என்ப‌து அனைவ‌ரும் அறிந்த‌து.


க‌னிமொழி சிறைக்கு சென்றால்தான் சிறையில் பெண்க‌ள் ப‌ட‌க்கூடிய‌ அவ‌ஸ்தை ப‌ற்றி ஊட‌க‌ங்க‌ள் பேசுகின்றன‌. சிறைக்குள் ஏற்க‌னவே இருக்கும் பெண் கைதிக‌ள், அவ‌ர்க‌ள் விசார‌ணைக் கைதியோ, த‌ண்ட‌னைக் கைதியோ, அவ‌ர்க‌ளின் பிர‌ச்ச‌னை ப‌ற்றி அத்த‌னை கால‌மும் எந்த‌ ஊட‌க‌மும் பேசாத‌து ஏன்?


இன்று எத்த‌னையோ தூக்குத்த‌ண்ட‌னை கைதிக‌ள் தூக்குக்காக‌ காத்திருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ளின் குடும்பம், பிள்ளைக‌ள் ந‌டுத்தெருவில் நிற்கின்ற‌ன‌ர். இவர்க‌ளில் ப‌ல‌ர் கொலைத்திட்டமில்லாது, அந்தநேர‌ கோப‌த்தில் செய‌ல்ப‌ட்டு கொலைக் குற்றாவாளியாயிருக்கலாம். அவர்‌க‌ள் த‌ண்ட‌னை குறைப்பால் எந்த‌ அர‌சிய‌ல்வாதிக்கும் லாப‌மில்லை என‌வே இவ‌ர்க‌ள் தூக்கிலேற‌வேண்டிய‌து தான்.

இல‌ங்கை க‌ட‌ற்ப‌டையால் தின‌மும் அவ‌திப‌டும் மீன‌வ‌ர்க‌ளுக்காக‌ அடையாள‌ போராட்ட‌ங்க‌ள்தான் செய்வார்க‌ள். பிர‌ச்ச‌னை தீரும் வ‌ரை ஏன் போராடுவ‌தில்லை? த‌மிழ் நாட்டுத் த‌மிழ‌னிட‌ம் (மீன‌வர்) த‌லைக்கு ஒரு ஓட்டு மட்டும் தான் இருக்கிற‌து, என‌வே இல‌ங்கை க‌ட‌ற்ப்ப‌டையால் சாக‌டிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் போக‌ மீதி இருப்பவ‌ர்க‌ள் ஓட்டு போட்டால் போதும் போலும். இவர்களுக்கு, அகதிகளுக்கு கிடைக்கும் உயிர்பாதுகாப்பு கூட கிடைப்பதில்லை.


ஆக‌ இவ‌ர்க‌ளுக்கு, த‌மிழ‌ர் உயிர் ப‌ற்றிய‌ அக்க‌றையும் இல்லை, தூக்குத‌ண்ட‌னை கைதிகள் மீதும் அக்க‌றையில்லை. அக்க‌றை "அக்க‌ரை த‌ரும் ச‌ர்க்க‌ரை(ப‌ண‌ம்?)" மீது தானோ என்று ச‌ந்தேகிக்க‌த்தோன்றுகிற‌து.

Saturday, August 6, 2011

பட்ஜட் 2011 - ஆச்சர்யம் ஆனால் உண்மை! - 1

செய்தி இரண்டொழிய வேறில்லை என்றாகிவிட்டது. தமிழ்நாட்டில் இப்போது ஐய்யா செய்தி, அம்மா செய்தி என இரண்டு விதமான செய்திகள் மட்டுமே நமக்கு கிடைக்கிறது. பட்ஜட்டில் உள்ள பிளஸ் என்ன, குறை என்ன என்று ஒரு நடுநிலை செய்தியை யாரும் வெளியிடுவதில்லை. பத்திரிக்கைகளையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.

ஜெ., அரசியலில் சிறிது பக்குவம் அடைந்துள்ளார் என பட்ஜட்டில் வரவேண்டிய வரிகளை முன்பே அறிவித்துவிட்டு இப்போது வரி இல்லா பட்ஜட் அறிவித்து நிருபித்துள்ளார். இல்லாவிட்டால் எல்லா பட்ஜட்களையும் போல வரிகளைப் பற்றி மட்டுமே அனைவரும் பேசிக்கொண்டிருப்பார்கள். பட்ஜட்க்கு முன் வரிகள் அறிவிப்பது பொதுவாக வரிகளின் அளவை பிரித்து பட்ஜட்க்கு முன் ஓர் அறிவிப்பும், பட்ஜட்டில் ஓர் அறிவிப்பும் செய்வார்கள். இப்போது அப்படி நடக்கவில்லை.

பட்ஜட்டில் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சலுகைகளை அம்மா செய்திகள் தூக்கிப்பிடிக்கின்றன. தனியார் பள்ளிமாணவர்களுக்கு இது பொருந்துமா என தெரியவில்லை. இப்போது மாதம் இவ்வளவு ரூபாய் என்று மாணவர்கள் கையில் பணம் புரள்வது எவ்விதமான‌ விளைவை ஏற்படுத்துமென பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். பணமாய் கொடுப்பது மாணவர்கள் குடும்பத்தின் பணத்தேவைக்காக படிப்பை பாதியில் விட்டு வேலைக்குச் செல்ல நேரிடும் அவலத்தை துடைக்கத்தான் ஆனால் இவ்வழி உதவுமா? காலம் தான் பதில் சொல்லவேண்டும்.


மாணவர்கள், ஏழைகள் என மக்களின் மீது கருணைப் பார்வை பார்க்க ஆரம்பித்திருக்கிறார் ஜெ. என்பதே ஆச்சர்யமான விசயம்தான். பார்க்கலாம் எத்தனை நாள்கள் என்று!

Click here to download பட்ஜட் as pdf

Monday, August 1, 2011

திமுகவை அழிக்கப் போவது யாரு?

போட்டி பலமாக உள்ளது. திமுக அமைப்பு ரீதியாக STRONGEST கட்சி- குறைந்த பட்சம் தமிழக அளவில்.  திமுக கட்டுக்கோப்பான கட்சி என கடந்த காலத்தில் பலமுறை நிருபித்திருக்கிறது. அதன் வாழ்வாதாரமான பலம், இதன் தலைவர் கருணாநிதியும், அவரின் பிராசார யுக்தியும் தான்.  தூணைத் துரும்பாகவும், பேனை பெருமாளாகவும் காட்ட வல்லவர். ஒரு விசயம் எவ்வித சாயம் பூசப்பட வேண்டும் என்பதிலும், புத்திசாலித்தனமாய் அதை எதிர்ப்பது யாராய் இருந்தாலும் (பத்திரிக்கையாளராயினும்) அவர்களின் குரலை இவர் ஏதோ ஒரு வழியில் SILENT செய்திடுவார்.  கட்சிக்குள் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டால் உடனே சிறை நிரப்பும் போராட்டம், தண்டவாளத்தில் தலை வைக்கிறேன்னு ஆரம்பித்து மக்களை திசை திருப்புவதில் வல்லவர்.  இப்போதுகூட செயற்குழு, பொதுக்குழுவில் அண்ணன் தம்பி விசயம் பத்திரிக்கையில் பேச ஆரம்பித்த உடன், சமச்சீர் கல்விக்காக மறியல் போர் அறிவித்தார்.  சும்மா இருக்கும் தொண்டனுக்கு வேலை வேண்டுமல்லவா?

இப்படி சகலதிறமையும் உள்ள தலைவனைக் கொண்ட கட்டுக்கோப்பான கட்சி, கலகலக்க ஆரம்பித்துவிட்டது. அதன் கட்டமைப்பில் விரிசல்கள் விழ ஆரம்பித்து விட்டது. பிரதான எதிரியான அதிமுக இதுவரை திமுகவை அழிக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. ஏனென்றால் திமுக இருக்கும் வரை, அதுவும் நேர் எதிரான அரசியல் நிலைப்பாட்டை எப்போதும் எடுக்கும் திமுக இருப்பது தான் அதிமுகவிற்கு நல்லது. அதிகபட்சம் அதிமுகவின் முயற்சி, திமுகவை பலவீனமான ஒரு கட்சியாக்க முயல்வதாகத்தான் இருக்க முடியும். ஆக‌வே திமுக‌வை அழிக்க‌ முய‌லாது.

விஜ‌ய‌காந்த், ச‌ர‌ச‌ர‌ என்று வ‌ள‌ர்ந்து வ‌ரும் இவ‌ரின் வெளிப்ப‌டையான‌, முக்கியமான‌ எதிரி திமுக தான். திமுக‌வின் அழிவில் வ‌ள‌ர‌த்த‌க்க‌ ஒரு க‌ட்சி இவ‌ருடைய‌து என்றாலும், திமுக‌ முன் இவ‌ர‌து க‌ட்சி ஒரு பொடிப்ப‌ய‌லைப் போன்றது. க‌ட‌ந்த‌ தேர்த‌லில் ச‌ரியான‌ முடிவெடுத்து, திமுக‌வின் அதிக‌ப‌ட்ச‌ எதிர்ப்பை ச‌ந்தித்தார்.  தேமுதிக‌வை ப‌ற்றி விம‌ரிசிக்காம‌ல், விஜ‌ய‌காந்த் ப‌ற்றி த‌ர‌ம் தாழ்ந்து விம‌ரிசித்த‌து திமுக‌வின் ஊட‌க‌ங்க‌ள். திமுக‌வின் மிக‌ப்பெரிய‌ ப‌ல‌மான‌ திரிபுவாத‌ பிர‌ச்சார‌த்தை மீறி விஜ‌ய‌காந்த் எதிர்க‌ட்சி த‌லைவராக அமரும் விதமாய் தேமுதிக வென்றதற்கு, திரிபுவாத பிரச்சாரச் சூழ்ச்சியை மக்கள் உணர்ந்ததுதான் காரணம். என்வே திமுகவின் செல்வாக்கை குறைப்பதில் இவர் முதல் படி தாண்டிவிட்டார் என்று சொல்லலாம்.  தாவிது மற்றும் கோலியாத் கதையை நினைவுபடுத்துகிறார்.  ஆனால் திமுகவை அழிக்க இவரால் இயலாது.

வைகோ, திமுக அழிந்து அதன் தொண்டர்கள் மதிமுகவில் இணைவார்கள் என்ற கனவு இவருக்கு இருக்கலாம். கருணாநிதியே, தன்னை அழைத்து திமுகவின் தலைவராயிருந்து கட்சியை வழி நடத்துங்கள் என்று சொல்வாரென்ற அளவிற்கோ அல்லது கருணாநிதிக்குப் பின் திமுகவின் 2ம் கட்ட தலைவர்கள் தன்னை அழைத்து தலைமை ஏற்க சொல்வார்கள் என்றோ கூட அவர் கனவு காணலாம். அது அவர் உரிமை !  ஆனால் திமுகவை அழிக்கத் தேவையான சக்தியோ, இன்னபிறவோ இவருக்கு இல்லை.

பகையாளியை உறவாடி கெடு என்று காங்கிரஸ் இப்போது செயல்பட்டு அதில் பாதி வெற்றியையும் பெற்று விட்டது. முகவின் எதிர்காலத்தை (பிள்ளைகளை) முடக்கினால் திமுகவை முடக்கி விடலாமென திட்டமிட்டு செயல்பட்டு கனிமொழியை சிறையில் தள்ளியது. தொடர்ந்து மாறன் சகோதரர்களும் அடுத்த இலக்காகி உள்ளனர். காங்கிரஸ் திமுகவை அழிக்கும் எண்ணத்தோடு செயல்படுவது போல்தான் தெரிகிறது.  அதில் அவ‌ர்க‌ள் வெற்றி பெற்றாலும் அத‌ன் ப‌யனை இப்போது அவ‌ர்க‌ளால் அனுப‌விக்க‌ முடியாது. அந்த‌ நிலையில் த‌மிழ‌க‌ காங்கிரஸ் இல்லை. அந்த‌ நிலைக்கு வ‌ர‌ ஒரு நூற்றாண்டு தேவைப் ப‌ட‌லாம்.

இவையெல்லாவ‌ற்றையும் விட‌ ஒரு பெரிய‌ எதிரி திமுகவை அழிக்க க‌ண்மூடித்த‌ன‌மாய் வெலை செய்கிறது.... அது... உட்க‌ட்சிப் பிர‌ச்ச‌னை. த‌லைமைக்கான‌ போட்டி, அது தொட‌ர்பான‌ உள்ள‌டி வேலைக‌ள், ஆளும்க‌ட்சியாய் இருந்த காலத்தில் பிர‌ச்சனை/ஊழல் ப‌ண்ணாத‌ விச‌ய‌மே இல்லை எனும் நிலை, அத‌ன் மீதான இந்த ஆட்சியின் ச‌ட்ட‌ரீதியான‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள். இவ‌ற்றிலிருந்து திமுக‌ மீளுமா இல்லை மாளுமா என‌ பொறுத்திருந்து தான் பார்க்க‌ வேண்டும்.

Thursday, July 28, 2011

எடியூரப்பா - நீஙக நல்லவரா? கெட்டவரா?

காங்கிரஸ் கட்சி முன்னெப்போதையும் விட இப்போது எதிரிகளை எளிதாக அழித்தொழிக்கிறது.  ஒருவேளை மஹாராஷ்ட்ராவில் தன் முதல்வரையே மாற்றியதே என்று யோசிக்கத் தோன்றலாம். தன் கட்சியிலேயே அவர்கள் சில பலிகளை கொடுப்பது த‌ங்களை தூய்மையானவர்கள் என்று காண்பிக்கத்தானோ என்றுதான் தோன்றுகிறது. (இந்த உலகம் இன்னுமா நம்மளை நம்புது?)

எடியூரப்பா எத்த‌னை முறை பாத்ரூம் உள்ளே போயி க‌த்தி க‌தறி அழுது கொண்டாரோ? பாவ‌ம் ம‌னித‌னுக்கு இப்பொ பிடித்த‌ த‌மிழ் பாட‌ல் "சோத‌னை மேல் சோத‌னை.. போதும‌டா சாமி.." யாக‌த்தான் இருக்கும்.  முத‌ல்வ‌ர் வேலை பார்க்க‌ அவ‌ருக்கு எப்ப‌டி நேர‌ம் கிடைக்கிற‌து என்ப‌து க‌ட‌வுளுக்குத் தான் வெளிச்ச‌ம்!

ப‌வுன்ச‌ர் மேல் ப‌வுன்ச‌ர் போட்டுகிட்டே இருக்காங்க‌, இப்போ third umpire கிட்ட‌ வேற‌ விச‌ய‌ம் போயிருக்கு. பார்க்க‌லாம் என்ன‌ ந‌ட‌க்கிற‌தென்று.

சுர‌ங்க‌ ஊழ‌லில், தோண்ட‌த் தோண்ட‌ ஏக‌ப்ப‌ட்ட‌ த‌லைக‌ள் கிடைத்துள்ள‌ன‌. எல்லாம் ச‌ரி, இந்த‌ லோக‌யுக்தா அறிக்கை ச‌ம‌ர்ப்பிக்கும் முன்பே media வில் அது கிடைக்கிற‌தே அது எப்ப‌டி? 

இந்த‌ நாட்டில் "அரச‌ ர‌க‌சிய‌ம்" என்று ஒன்றே கிடையாதா?   நாடுக‌ள், அடுத்த‌ நாடுகளின் ராணுவ‌, ம‌ற்றும் இத‌ர‌ அர‌ச‌ ர‌க‌சிய‌ங்க‌ளை அறிய‌ ஒற்ற‌ர் ப‌டை ஒன்று அனுப்பியிருப்பார்க‌ள்.  ஆனால் இந்தியாவுக்கு அது அவ‌ர்க‌ளுக்கு தேவை இல்லை?   இங்கே media கார‌ர்க‌ள் எளிதாக‌ அதை செய்யும்போது, ஒற்ற‌ர் ப‌டை எத‌ற்கு?

 லோக‌யுக்தா தலைவ‌ரிட‌ம் ஒரு நிருப‌ர் கேட்கிறார், இத்த‌னை chapter, இத்த‌னை ப‌க்க‌ம் கொண்ட‌ இந்த‌ அறிக்கையை எப்போது அர‌சிட‌ம் ச‌ம‌ர்ப்பிக்க‌ போகிறீர்க‌ள்?  அத‌ற்கு அவ‌ர், "நான் கையெழுத்திட்டு இன்று ஒப்ப‌டைப்பேன்" என்கிறார்.  நாம் இன்னும் கையெழுத்திடாத‌ ஒரு அறிக்கையின் முழு ப‌ரிமாண‌மும் ஏற்க‌ன‌வே எல்லோரும் அறிந்த‌ ர‌க‌சிய‌ம் என்ப‌தில் அவ‌ருக்கு துளியும் வ‌ருத்த‌மில்லை போலும்.  ஒருவேளை கையெழுத்திட்ட ‌அறிக்கை leakஆனால் இன்னும் கேவ‌ல‌ம் என்றுதான் கையெழுத்திடாதிருந்தாரோ?  அவ‌ருக்கே வெளிச்ச‌ம்.

எல்லாம் ச‌ரி குற்ற‌ச்சாட்டு நிருபிக்க‌ப்ப‌ட்டால் அர‌சிய‌லை விட்டு வில‌குவ‌தாக‌ எடியூரப்பா சொன்னார்.  

எடியூரப்பா அவர்களே!  இப்போ அறிக்கையில் உம்முடைய‌ பாட்டும் குற்ற‌முடைய‌துன்னு சொல்லிருக்கிற‌தே,  நீர் நல்லவரா? கெட்டவரா?

Thursday, July 21, 2011

சமசீர் கல்விக்கு வெற்றி !

சமசீர் கல்வியில் என்ன தவறுன்னு இவங்களும் சொல்ல மாட்டேன்றங்க, நீதி மன்றத் தீர்ப்பிர்க்கு பிறகும் நமக்கு சொல்லப்படவில்லை.

ந‌ம‌க்கு தெரிந்த‌தெல்லாம், ஐய்யாவின் க‌விதை இட‌ம் பெற்றுள்ள‌‌துன்ற‌துதான்!

ஐய்யா கவிதையையே யாரும் கவிதைனு ஒத்துக்கொள்வதில்லை ( doubt இருந்தா MSVயிடம் கேட்கவும்), இதில, சொக்காரங்க எழுதின கவிதையெல்லாம், புதிய கல்வித் திட்டத்தில் சேர்த்திருக்காரு, அப்றம், அதை வேணா உட்ருங்கன்னு ரொம்ப பெருந்தன்மையான்வரை போல பேசுனாரு. இப்போ வெற்றி தோல்வி யாருக்கும் இல்லைன்னு அடுத்த நாடகம்.

"எங்க தலைவரை எதிர்த்து அரசியல் பண்ண ஒருத்தன் இன்னும் பொறக்கல" னு என் "பிற்ண்டு" (friend) பிறாண்டியது, மீண்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Becuase, இது கலைஞரின் கவிதைக்கோ, புதிய பாடத்திட்டத்தின் syllabusகோ, அதன் குழுவிற்கோ கிடைத்த வெற்றியில்லை.

இது "சம சீர் கல்வி" என்ற பெயருக்கு கிடைத்த வெற்றி !

சம சீர் கல்வி ஐய்யா கொண்டு வந்ததுன்றதுக்காக அம்மா எதிர்ப்பது(அப்படி மக்கள் நினைக்கும்படிதானே  அம்மா செயல்படுகிறார்) எவ்ளோ தவறோ, அவ்ளோ தவறு, அம்மாவின் (எதிர்ப்பு) குழு அதை சரியா செய்யல, இதை சரியா செய்யலன்னு சொல்லி, சம சீர் கல்வி எல்லா வகுப்புக்கும் இந்த கல்வியாண்டிலேயே நடைமுறைப் படுத்த முயற்சி செய்வது.

ப‌டிப்ப‌டியாக‌ நடைமுறைப் படுத்துவ்தே ச‌ரி.

சரியான விசயமாக இருந்தாலும் சரியான முறையில் செய்ய வேண்டும்.

Sunday, July 17, 2011

அம்மாவின் "துக்ளக் தர்பார்" !

அம்மா எப்படி என்பது எல்லொருக்கும் தெரிந்த விசயம்.  அவருக்கே தெரியாத விசயம் அவரால் கட்டுப்படுத்த முடியாதபடி செயல்படும் அதிகார மையத்தை தவிர்ப்பதெப்படி என்பது தான்.

"அதிகார மையம்" யார் என கேட்கும் அப்பாவிகள் மன்னார்குடி போய் 1/4 கிலொ மல்லாட்டை சாப்பிட்டு வாருங்கள்!

அம்மா வெற்றி பெற்றது அவரின் திறமையோ, புத்திசாலித்தனமோ, கூட்டணியோ (மட்டும்?!) காரணமல்ல என அவருக்கும், அனைவருக்கும் தெரிந்த உண்மை.  மக்கள் கருணா மீதான கோபத்தில் ஆட்சி மாற்றம் தேவை என கொடுத்த வாய்ப்புதான் இது.

ஆரம்பத்திலேயே இதை உணர்ந்துதான் பேசி, செயல்பட்டு வந்தார் ஜெ. என்றாலும் தற்போது காணக் கிடைக்கும் காட்சிகள், விரைவிலேயே ஜெ மக்களில் அதிருப்தியை சம்பாதித்து விடுவார் என தோன்றுகிறது.

ஜெ எப்போதும் மக்களுக்குத் தேவையான, சரியான திட்டங்கள் தீட்டி, தீவிரமாய் நடைமுறைப் படுத்துவார் என பெயர் பெற்றவர்.  இம்முறை, அவர், நீண்டகால திட்டங்கள், தொலை நோக்கு பார்வை தேவைப்படுகிற திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுப்பது தவறல்ல, மின்சார பற்றாக்குறையை போக்க எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி, அவை பலனளிக்க ஆரம்பிக்கும் வரை மக்கள், அறியவோ, பாரட்டவோ போவதில்லை, மாறாக சட்டம் ஒழுங்கு போன்ற தினசரி பிரச்சனைகளில் மக்கள், ஆட்சி மாற்றத்தை உணரும் விதமாக நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே ஜெ பாமர மக்களின் நன்மதிப்பை பெறமுடியும்.

ஓர் அர‌சின் நடவடிக்கைகளின் விளைவை ம‌க்க‌ள் உணரும் விதமாக அரசு அறிவிப்புகள் வெளியிட‌ ‌வேண்டும்.  க‌ருணாவிற்கு "PR skills" கைவ‌ந்த‌ க‌லை, ஜெ க்கு இத்த‌னை ஆண்டு அனுப‌வ‌த்திற்குப் பிற‌கும் கை வ‌ராத‌ க‌லை இது.

ஒரு நிறுவனத்தை நிர்வாகம் செய்வதற்கும், அரசு நிர்வாகத்திற்குமான வித்தியாசத்தை ஜெ உணர்ந்ததாகத் தெரியவில்லை.

படித்த மக்களிடம் கூட ஜெ அர‌சு இருந்த ந‌ல்ல‌ பெயரையும் கெடுத்துக் கொண்டிருக்கிறது.  IAS, IPS அதிகாரிகள் தினமும் காலையில் ஜெயா டீவி பார்த்துதான் தாங்கள் எந்த பணியில், எந்த ஊரில் இன்று பணியாற்ற வேண்டும் என்பது அரசைப் பார்த்து, அதிகாரிகளைப் பார்த்து, மக்கள் நகைக்கும் நிலையை உருவாக்கியுள்ளது 

மந்திரிகள் பாடு அதை விட மோசம்!

துக்ளக் "சோ" தான் ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டதாக பலர் பெருமை பேசிக்கொள்கின்றன்ர்.  அது ஜெ அரசுக்கு அவமானமில்லை ஆனால் இது "துக்ளக் அரசு/தர்பார்" என்று சொல்ல நேர்ந்தால் அது அவமானம்; உடனே ஜெ உஷாராகவில்லையென்றால் "இது துக்ளக் தர்பார்" என்று முதலில் துக்ளக் "சோ"  சொல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

Saturday, July 16, 2011

கருணாவின் கண்ணி வெடிகள்!

எச்சரிக்கை: இது ஈழ கருணாவைப் பற்றியதல்ல‌ !

திமுக, 2011 தேர்தலில் ஆட்சியை பிடிக்காது என்று முதலில் அறிந்தவர், திரு. கருணாநிதி தான் என்று நினைக்கிறேன். ஆகவே அவர் நிறைய கண்ணி வெடிகளை புதைத்து விட்டு வந்துள்ளார்.

அடுத்து வரும் முதல்வர் கால் (கை) வைக்கும் இடமெல்லாம் பிரச்சனை வெடிக்க வேண்டும், எவ்விதம் முடிவெடுத்து செயல்பட்டாலும் அது பிரச்சனை கிளப்பவேண்டும் என்று திட்டமிட்டு செயல் பட்டது போல் தெரிகிறது.

இதை படித்த உடனே அவரின் ராஜதந்திரம் என போற்ற நிறைய பேர் கிளம்பி விடுவார்கள். இந்த மாதிரி முட்டாள் தனமான புகழ்பாடி களால் தான் தமிழ் நாட்டில் தினமும் ஒரு "வருங்கால முதல்வர்" உருவாகிறார்.

முதல் வெடி:
புதிய‌ க‌ட்டிட‌த்தில், ச‌ட்ட‌ச‌பை செய‌ல் ப‌ட‌ வேண்டுமானால் க‌ட்டிட‌ ப‌ணி முடிய‌ வேண்டும். க‌ட்டிட‌ ப‌ணி முடிய‌ வேண்டுமானால் கோடிக் க‌ண‌க்கில் செல‌வு செய்ய‌ வேண்டும். தேவையான செலவுகளுக்கே நிதி இல்லாத போது, கட்டிட பணி செய்ய நிதி ஒதுக்க முடியாது. என்வே பழைய கட்டிடத்தில் செயல் பட புது முதல்வர் முடிவு செய்வார், அங்கே எப்படி ஆப்பு வைப்பது என்று யொசித்து அங்கே "செம்மொழி நூல‌க‌ம்" அமைத்தார். இதை வேறு இட‌த்திற்கு மாற்றாம‌ல், இங்கு ச‌ட்ட‌ச‌பை செய‌ல் ப‌ட‌ இய‌லாது, இதை மாற்றினால் பார்பனர், தமிழுக்கு எதிரானவர்ன்னு பிரச்சனை எதையாவது கிளப்பி விடலாம் என்று செம ப்ளான்.

ஆனால் ஜெ, அதை வெற்றிகரமாக சமாளித்துள்ளார்.

அடுத்தது, பள்ளிக் கட்டணம். அதை விட பெரிய வெடி, சமச்சீர் கல்வி.

பேரை கேட்டாலே சும்ம‌ அதிரும்ல‌ன்னு வைத்த‌ வெடி இது. ச‌மச்சீர் க‌ல்வி, 1, 6 வ‌குப்புக் க‌ளுக்கு ஏற்கன‌வெ அறிமுக‌ப் படுத்தியாச்சி அவ‌ர் ஆட்சியிலேயே!. அது ஏன் 1, 6 மட்டும்? புதிய‌ பாட‌த்திட்ட‌ம் அறிமுக‌மாக்கும் பொழுது கடைப்பிடிக்க‌ப் ப‌டும் ம‌ர‌பு. 1, 6 வ‌குப்பு மாண‌வ‌ன் அடுத்த‌ க‌ல்வியாண்டுக்கு வரும்போது அவ‌னுக்கு புது பாட‌த்திட்ட‌ம் கிடைக்கும், அதாவ‌து 2,7 க்கும் புதிய‌ பாட‌த்திட்ட‌ம் அறிமுக‌மாகும். அது அவ்வாறே தொடர்ந்து, 3,8; 4,9; 5,10; என தொடரும் க‌ல்வியாண்டுகளில் புதிய‌ பாட‌த்திட்ட‌ம் அறிமுக‌மாகும்.

இவ‌ரு 2,7 ம‌ட்டும‌ல்ல‌ எல்லா வ‌குப்புகளுக்கும் இந்த 2011-12 கல்வியாண்டில் புதிய‌ பாட‌த்திட்ட‌ம் அறிமுக‌ப்படுத்த‌ திட்ட‌மிட்டார். அது ம‌ட்டும‌ல்ல‌, பாட‌த்திட்ட‌ம் அறிமுக‌மானால் புதிய பாடம் (subject) உதாரணமாக பொருளியல் ஆசிரிய‌ர் நிய‌மிக்க‌ வேண்டும். அதில் ப‌ல‌ ந‌டைமுறைச் சிக்கல்களை, பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டும். 

இப்போது விசயம் நீதிமன்றத்தில் உள்ளதால், தீர்ப்பை பொருத்து ஜெ செயல்பட்டால் போதும், எது பிரச்சனை என்றாலும் நீதிமன்ற வழிகாட்டலோடு தப்பித்து விடலாம்,

என்ன கண்ணைக் கெட்டுதா?

கருணாவின் கண்ணி வெடிகள் - பாக‌ம் 2 சில‌ நாட்க‌ளுக்கு பின் தொடரும் !

Wednesday, June 22, 2011

லோக்பாலும் 40 திருட‌ர்க‌ளும்

இப்போ சில மாதங்களாக லோக்பால் என்ற வார்த்தைதான் செய்தி ஊடகங்களில் "அடி" பட்டுக்கொண்டிருக்கும் வார்த்தை.  இந்த கூச்சல்களுக்குப் பின்னால் இருப்பது என்னன்னு அறிய யாருக்கும் நேரமில்லை?!!

இது கருப்பு பணத்தை ஒழிக்க அன்னா ஹாசாரெ கொண்டு வந்துள்ள திட்டம் என்று ஒருவர் சொன்னார், மற்றொருவர், இது ராம்தேவ், அன்னா ஹாசாரெ இருவரும் வெளி நாட்டிலிருந்து நமது கருப்பு பணத்தை கொண்டு வரும் திட்டம் என்றார்.  I cannot blame them.

If u want to know it, Visit  http://en.wikipedia.org/wiki/Jan_Lokpal_Bill

Anyway! நான் சொல்ல வருவது 2 விசயங்கள். 1.  இது நடைமுறை சாத்தியமா? 2.  இது நடக்குமா?  இரண்டும் ஒன்று போல் தெரிந்தாலும் ஒன்றல்ல.

அன்னா ஹாசாரெ கேட்கும் லொக்பால் ஒரு வரியில் சொன்னால், எல்லா ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க, தனியே ஒரு அமைப்பு.

நல்ல விசயம் தானெ என்கிறீர்களா?

ஆம் நல்ல விசயம் தான் ! ஆனால், இந்த அமைப்புக்கென்று தனியெ ஒரு காவல் படை உள்பட‌ இந்தியாவில் குற்றப் புலனாய்வில் எந்த எந்த துறைகள் உண்டோ அத்தனையும்  லொக்பால் கீழ் தனியே அமைக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.  இது கிட்டத்தட்ட இன்னொரு "இணை அரசாங்கம்" "Parallel Govt" அமைப்பது போல.  இது நடைமுறைச் சாத்தியம் அல்ல!.

இது 1969 லிருந்து இன்று வரை ராஜ்ய சபா, லோக் சபா, சமூக ஆர்வலர்கள் என பந்தாடப் பட்டு வருகிறது. 

அப்றம் ஏன் அரசு இதில் இவ்வளவு அக்கறையோடு பேச்சுவார்த்தை நடத்துகிறது?

இந்த‌ அர‌சாங்க‌ம், ஊட‌க‌ங்க‌ளுக்கும், ம‌க்க‌ளுக்கும், ஒரு நாட‌க‌மாய் இதை ந‌ட‌த்தி வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிற‌து.

விலைவாசி, காஷ்மீர், 2G இன்ன‌பிற‌ பிர‌ச்ச‌னைகள் நாம் மற‌க்க‌வேண்டாமா?

இது, பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தை, காவிரி பேச்சுவார்த்தை, ம‌க‌ளீர் ம‌சோதா, போல மற்றொரு நாட‌கம் அவ்வ‌ள‌வுதான்!

எங்கோ ஒரு இடத்தில் பெரிய ரயில் விபத்தோ, குண்டு வெடிப்போ நடக்கும் வரை உ இந்த நாட‌கம் ஊடகங்களில் முன்னிருக்கும், அது வரை enjoy!

Tuesday, January 18, 2011

கவிதை எழுதலாம் வாருங்கள்...! பகுதி - ஆ

பகுதி ஆ பிரசுரிக்க தாமதமானதற்கு மன்னிக்கவும் !

ஹைக்கூ அனைவருக்கும் புரிந்திருக்குமென்று நம்புகிறேன்.

அடுத்தது.. வசன கவிதை!

உலகிலேயே மிக எளிதானதும், மிக கடினமானதும் இது தான்!!!

அது எப்படின்னு கேட்கிறீர்களா?

எழுத எளிதானது.. ஏன் ##கடினமென்று இறுதியில் கூறுகிறேன்.

முதலில் உதாரண கவிதையய் பார்ப்போம்

*********************************
க‌ட்டுரைக‌ளுக்கு
முக்கிய‌ம்
ப‌த்தி   பிரித்த‌ல்
அது அவ‌சிய‌மில்லை இங்கு

ஆனால்
பிரித்த‌ல் எளிது
இங்கு வ‌ரி
மிக முக்கிய‌ம் 
எனினும் அது

நாமாக‌
பிரித்தால் வ‌ரி
அது ஒருவேளை

க‌விதையை
கெடுக்க‌லாம், என‌வே
விட்டுவிட‌ வேண்டும்.
நாம் அதை க‌ட‌வுளிட‌ம்
***************************
வழக்கம்போல் முதலில் ஒரு பொருள் (subject) தேர்ந்தெடுக்கனும் !  அதைப் பற்றி ஒரு 6 வரிகள் வருமாறு கட்டுரை எழுதவேண்டும். கட்டுரையான்னு கேக்கக்கூடாது. ஆரம்ப காலத்தில், முடிந்த‌ வ‌ரை சிறிய‌ வாக்கிய‌ங்க‌ளை கொண்டு எழுதுவ‌து ந‌ல்ல‌து.  அதுவும் யாரிட‌மாவ‌து பேசும் தொனியில் இருத்தல் நல‌ம். 

க‌ட்டுரைக‌ளுக்கு ப‌த்தி பிரித்த‌ல் முக்கிய‌ம்.  ஆனால் இங்கு அது அவ‌சிய‌மில்லை.  இங்கு வ‌ரி பிரித்த‌ல் எளிது, எனினும் அது மிக முக்கிய‌ம்.   நாமாக‌ வ‌ரி பிரித்தால் அது ஒருவேளை க‌விதையை கெடுக்க‌லாம், என‌வே நாம் அதை க‌ட‌வுளிட‌ம் விட்டுவிட‌ வேண்டும்.

(க‌ட‌வுளை நம்பாத‌வ‌ர்க‌ள் இய‌ற்கையிட‌ம் விடுங்க‌ள்.) க‌ட‌வுளிட‌ம் விடுவ‌து என்றால், நீங்க‌ள் செய்ய‌வேண்டிய‌து இதுதான்.

க‌ணினியில் எழுதிய‌வ‌ர்க‌ள் இங்கு ப‌டிக்க‌வும்

முதலில் cursor  கட்டுரையின் முதல் வார்த்தைக்கு அடுத்து நிறுத்துங்கள், ஒரு enter அடிக்கவும். பின் கண்ணை மூடிக்கொண்டு cursor  மேலும், கீழும், இடம், வலம் என இஷ்டத்திற்கு move  செய்து தோணும் இடத்தில் எல்லாம் enter அடிக்கவும்.   Enter அடித்தது போதும் என தோன்றிய பிறகு கண்ணை திறக்கவும். எதேனும் ஒரு வரியில் மூன்று வார்த்தைகளுக்கு மேல் இருந்தால் அதை மீண்டும் உடைக்கவும். மொத்தம் எத்தனை வரிகள் என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

தாளில் எழுதுப‌வ‌ர்க‌ள் இங்கு ப‌டிக்க‌வும்

முதலில் கட்டுரையின் முதல் வார்த்தைக்கு அடுத்து பென்சிலால் / போல கோடிடுங்கள், பின் கண்ணை மூடிக்கொண்டு மேலும், கீழும், இடம், வலம் என இஷ்டத்திற்கு நகர்ந்து தோணும் இடத்தில் எல்லாம் பென்சிலால் / போல கோடிடுங்கள். பென்சிலால் கோடிட்டது போதும் என தோன்றிய பிறகு கண்ணை திறக்கவும். எதேனும் ஒரு வரியில் மூன்று வார்த்தைகளுக்கு மேல் இருந்தால் அதை மீண்டும் உடைக்கவும். மொத்தம் எத்தனை வரிகள் என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

இனிதான் முக்கியமான வேலை இருக்கு.. ஒரு வாக்கியத்தின் துண்டுகளை அவற்றிற்குள் வரிசை மாற்றி போடுங்கள்.  கட்டுரையின் முதல் வாக்கியம், கவிதையில் 4 வரியாய் மாற்றியிருந்தால், 1234 வரிசைக்கு பதிலாக 1324 or 1243 etc என்று வரியின் வரிசை மாற்றுங்கள், அப்போ தான் kick கிடைக்கும். அதே போல் கட்டுரையின் எல்லா வாக்கியங்களுக்கும் செய்யவும்.


நீங்க‌ள் க‌விதை எழுதிமுடித்தாயிற்று !! அவ்ளோதானான்னு கேக்காதிங்க‌.. அவ்ளோதான்..

வசன கவிதை தயார்... நடிகர் விஜய் யெல்லாம் பெரிய Dancer  ன்னு பேர் வாங்கும் போது நீங்க‌ள் பெரிய‌ க‌விஞர்ன்னு பேர் வாங்க‌ முடியாதா? விடாமல் முயற்சிக்கவும், கவிதை வராவிட்டாலும் பேர் கிடைக்கும்


உதாரண கவிதை மேலே சிகப்பு நிறத்திலிருக்கும் பத்தியிலிருந்து இங்கே சொல்லியபடி உருவாக்கப்பட்டது.
##படித்து ஜீரணம் பண்ணுவது தான் கடினம்

Saturday, January 8, 2011

கவிதை எழுதலாம் வாருங்கள்... பகுதி-அ

நான் ஒரு 1 மாத விரைவு பயிற்சி (fast track course) குடுக்கலாம்ன்னு இருக்கேன்.

(fee details#  are given at the end of this post)   (People who wish to join can post ur details in comment section)

கவிஞன் ஆகணும்ன்னா முதலில் எவ்விதமான கவிதை உங்களுக்கு நல்லா வருதுன்னு தெரிந்து கொள்ள வேண்டும். (என்னது வித விதமான கவிதைகள் இருக்கான்னு கேக்காதீங்க)

உதாரணம்: ஹைக்கூ, மரபு கவிதை, வசன கவிதை etc...

ஹைக்கூ:  இது எழுதுறதும், பிரசுரமாவதும் ரொம்ப ஈசி. ஆன பத்திரிக்கைகள்ள 50 ரூபாய் தான் சன்மானம் கொடுப்பாங்க (5 வார்த்தைக்கு 50 ரூபாய்ன்னா சும்மாவா), அது போதும்ன்னா இத முயற்சி பண்ணலாம்.
தவிர, இதை முதல் படியா நினைச்சீங்ன்னா சீக்கிரம் முன்னேறிடலாம்.

முதல்ல ஒரு பொருள் (subject)  தேர்ந்தெடுக்கனும்.  எப்படி தேர்ந்தெடுக்கனும்ன்னா, எதாவது ஒரு பழைய புத்தகத்தில் வந்த துணுக்கு, சிரிப்பு அல்லது நேத்து ராத்திரி 12' o clock க்கு வந்த மொக்கை குறுசேதி (SMS)தேர்ந்தெடுக்கனும்.   அதை வாணலியில் யிட்டு..sorry  அந்த வரிய விட்டுருங்க.

தேர்ந்தெடுத்த சிரிப்பு அல்லது செய்தியை ஒரே வரியில் 5 வார்த்தைகளுக்குள் அடங்குமாறு முதலில் எழுதவும்.   பின், கடைசி
மூன்று வார்த்தைகள் முதல் வரியில் இருக்குமாறு வரி பிரிக்க வேண்டும். (tax collection  இல்லை line  breaking )

6 வது வார்த்தை இருந்தால் என்ன பண்றதுன்னு கேட்கிறீர்களா?

.... அதை தலைப்பாக்கி விடுங்கள்.


உதாரணம்:

பெண்ணீயவாதி

பெண்விடுதலை மாநாட்டிற்கு சென்றாள்
கணவனின் அனுமதியோடு


அவ்ளோதான்
கவிதை தயார்.. நீங்கள் கவிஞர் ஆயிடீங்க‌

எழுத்தாளர் சுஜாதா உயிரோடு இல்லை எனவே யாரும் இதை ஹைக்கூ என்று சொல்வதை ஆட்சேபிக்க மாட்டார்கள். அப்படி யாராவது இது ஹைக்கூ இல்லைன்னாங்கன்னா. உங்களுக்கு சென்ரியு தெரியுமான்னு கேளுங்க, ஓடிப்போயிருவார், அதுவும் தெரிந்தவர் உங்களிடம் கேள்வியே கேட்கமாட்டார்.

பகுதி-ஆ நாளை வெளியாகும்... அதுவரை காத்திருக்கவும்

உங்கள் கவிதைகளை பின்னுட்ட‌த்தில் சிந்(து/தியு)ங்கள்

பி.கு.:

சும்மா எதுகை மோனையா பேசினாலே கவிதை கவிதைன்னு சொல்லிச் சொல்லியே சும்மா அவனவன் பேசுவ‌தை/எழுதுவ‌தையே கவிதை (கவதை??) ன்னு சொல்லிக்கிற அளவுக்கு கீ...ழே போயிட்டாங்க.

 இவங்க‌ வதை தாங்க முடியலைஙக...   அதனால தான் இந்த‌ வதை  sorry.. பதிவு !

"கவிங்கன்" (கவிஞன்) ஆக‌னும், பிரபலமாகனுங்கற வெறி நிறைய பேருக்கு பிடிச்சி ஆட்டொ ஆட்டுன்னு ஆடுட்டுது.

அவிங்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

 #Fee: 10 sacs of onion and 10 sacs of garlic.

Saturday, January 1, 2011

அன்ன‌தான‌ச் சாப்பாடின் விலை Rs. 199

இது புத்தாண்டின் முந்த‌ய‌ இர‌வில் ந‌டைபெற்ற‌ நிக‌ழ்ச்சி.

ம‌டிப்பாக்க‌ம் ப‌சார் சாலையில் ஒரு உண‌வ‌க‌ம் உள்ள‌து.  முன்பு அங்கு வேறு உண‌வ‌க‌ம் இருந்த‌து. அங்கு உண‌வும் ந‌ன்றாக‌ இருந்த‌து.  இங்கு உண‌வ‌ருந்த‌ என் ந‌ண்ப‌ரும், அவ‌ரின் ம‌னைவியும் அழைத்தனர்.

வேளச்சேரி ஆர்த்தி பவன் எங்களுடைய விருப்பமாயிருந்தது. இருந்தாலும் நானும் என் மனை‌வியும் வ‌ர‌ ஒப்புக்கொண்டு ம‌டிப்பாக்க‌ம் சென்றோம்.

எங்க‌ளுக்கு முன்பே அங்கு வ‌ந்து விட்ட‌ ந‌ண்ப‌ர், இன்று இங்கு பஃபே இலவசம் என்று சொன்னார்.  நாங்கள் அப்போது ஆர்த்தி பவன் அருகில் வந்திருந்தோம். என் மனைவி அன்னதானமெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என்றார்.

நல்ல பார்த்தியான்னு நான் கேட்டேன்.

நல்லாப் பார்த்தேன்னு  சொன்னான். 

சரி அப்போ அ. ஆனந்தபவன் போலாம்ன்னு சொன்னேன்.

அவன் டேய் அங்க பஃபே வழக்கமா ரூ. 99 தான் ஆனால் இன்று 175 ரூபாய் டா என்றான்.

சரி நாம் (வழக்கமான முறையில்) வேண்டியதை ஆர்டர் செய்து சாப்பிடலாம் என்றேன்.

நாம் ஏன் இங்கு அதை செய்யக்கூடாது என்றான். 

என் மனைவி மனதில் மணி அடித்தது போலும், அவரை இங்க வரச்சொல்லுங்க இல்ல நாம மட்டும் இங்கே சாப்பிடலாம்ன்னு சொன்னாள். 

மனைவி சொல் மிக்க மந்திரமில்லை அல்லவா ‍(எதாவது சரியில்லாமல் போய்விட்டால் பாட்டு வாங்றது யாரு) ஆகவே அவள் சொன்னபடி அவனிடம் சொல்லிவிட்டேன். 

அவன் அங்கு சாப்பிட முடிவுபண்ணினான்.

அப்போது ப‌ள்ளிக்க‌ர‌ணையில் உள்ள‌ ஒரு ந‌ண்ப‌ர் பேசினார், அவ‌ர் அவ‌ரின் வீட்டிற்கு சாப்பிட‌ அழைத்தார். உண‌வ‌க‌த்தில் சாப்பிட‌ அழைத்து வ‌ந்து விட்டு வீட்டில் சாப்பிட்டால் என் மனைவி அடிப்பாள் என்றேன். அவரின் மனைவி என் மனைவியிடம் தொலைபேசியில் பேசி எங்களை வீட்டிற்க்கு வரவைத்து விட்டார்.

சாப்பிட்டு, பேசிவிட்டு நாங்கள் 11 மணிவாக்கில் வீடு திரும்பினோம்.  சுமார் 11:50 க்கு முதல் நண்பர் அழைத்தார். நாங்கள் சாப்பிட்டதைப் பற்றி கேட்டார், சொன்னேன்.

அவர் சாப்பிட்ட கதை கேட்ட போது தலைவர் காமெடி பீஸ் ஆனது தெரிய வந்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் திறந்திருப்பதால், புத்தகங்களோடு சாம்பு சாசே தருவது போல ஃப்ரீ பஃபெ என நினைத்து உள்ளே சென்றுள்ளன‌ர். நன்றாக சாப்பிட்ருக்கிறார்கள்.

சாப்பிட்டு முடிக்கும் வேளையில் பில் தலைக்கு ரூ. 199 என்று சொல்லவும். நண்பரின் மனைவி செம டென்ஷன் ஆகியிருக்கிறார்.

நண்பர், ஃப்ரீன்னு போட்றுகியளே (தேவர் மகன் ரேவதியின் "மறந்திருவேன்னியளே" போல) என்று கேட்கவும், அவர்கள், 2 க்கு 1 ஃப்ரீன்னு சொல்லிருக்கார். இவர் இருவராய் இருந்ததால் ஃப்ரீ இல்லை,  பணம் கொடுத்துட்டு வந்திருக்கார்.

அங்கிருந்து கிள‌ம்பிய‌திலிருந்து அவ‌ரின் ம‌னைவி, செம அர்ச்ச‌னை செய்துள்ளார். உண‌வக‌த்துக்கார‌ருக்கு, என் ந‌ண்ப‌ருக்கும் கோடிய‌ர்ச்சனை என்று அவர் சொன்னபோது நான் விழுந்து விழுந்து சிரித்தேன்.  அவர் ரொம்ப‌ சிரிக்காதெ உங்க‌ளிருவ‌ருக்கும் ல‌ட்சார்ச்ச‌னை என்றார்.  நாங்க‌ என்ன‌ய்யா செய்தோம்ன்னு கேட்டால், நான்கு பேரில் ஒருவ‌ருக்கு ஃப்ரீ கிடைத்திருக்குமே.  முழு ஃப்ரீ எதிர்பார்த்ததிற்கு மூன்றிலொன்றாவது கிடைத்தது என்று மகிழ்ந்திருப்பாள். 

நல்லா இருக்கே கதை? இவங்க‌ ம‌ட்டும் ஏமாந்த‌து தான் உண்மையான‌ வ‌ருத்தாமா இருக்குமென்கிறாள் என் ம‌னைவி.

ஆக‌ மொத்த‌ம் வெறுமே ஃப்ரீன்னு போட்ட‌து அவ‌ங்க‌ த‌ப்பு, அன்ன‌தான‌த்துக்கு(?) ஆசைப் ப‌டாவிட்டாலும் ஃப்ரீ எதிர்பார்த்த‌து இவ‌ரின் தவ‌று..

நீங்கள் என்ன‌ சொல்கிறீர்க‌ள்?